பிரேம்-ரமேஷின் கடவுளைக் கொல்பவர்கள் - அறுபட்டுப்போன அஞ்ஞானம்

January 12, 2024 in சமயம், தத்துவம் by வே. வெங்கட்ரமணன்6 minutes

கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரை பல நல்ல விடயங்களைக் கொண்டது. ஆனால் இந்தக் கட்டுரை முழுவதும் விரவிக்கிடக்கும் கருதுகோள்களில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. பல அடிப்படை உண்மைகள் எழுதுகின்ற விஷயத்திற்குத் துணைபோகத் திரிக்கப்பட்டிருக்கின்றன அல்லது நீர்க்கப்பட்டிருக்கின்றன.

ஏப்ப்ரில் மாத உயிர்மையில் http://tamil.sify.com/uyirmmai/april05/fullstory.php?id=13721085 கடவுளைக் கொல்பவர்கள் என்ற தலைப்பில் பிரேம்-ரமேஷின் கட்டுரை வெளியாகியிருக்கிறது. இந்த இதழ் மிகச் சமீபத்தில்தான் எனக்குக் கிடைத்தது. உயிர்மை தளத்திலும் தாமதமாகத்தான் போடுகிறார்கள். இந்தக் கட்டுரையைப் பற்றி தங்கமணி அவருடைய பதிவில் சுட்டியிருந்தார்.

இந்தத் தொடரின் பிற கட்டுரைகளைப் போலவே, கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரையும் பல நல்ல விடயங்களைக் கொண்டது. பொருதும் மனிதர்களின் வெற்றி-தோல்வியில் அவர்கள் தொழுது நிற்கும் கடவுளர்களும் வெற்றியடைகிறார்கள் அல்லது தோற்றுப் போகிறார்கள். ஒரு வகையில் டார்வினின் வல்லவன் வாழ்வான் கொள்கையைப் போல வல்லவனின் கடவுளர்கள் வாழ்ந்துநிற்க தோற்றவனின் கடவுளர்கள் அடிமையாகிறார்கள் அல்லது வேறு வழிகளில் உள்வாங்கப்படுகிறார்கள். அதேபோல கடவுளைக் கொல்வதில் எல்லா மதத்தினரும் முனைப்புடன் ஈடுபடுகிறார்கள். அதாவது தான் தொழும் கடவுளின் மேன்மையத் தனக்குத்தானே நிரூபிக்க ஏனைய தெய்வங்களை நிர்மூலமாக்குவது ஆத்திகர்களின் தலையாய கடமையாகிறது. மறுபுறத்தில் எதையும் மறுப்பதாகத் தோன்றிய நாத்திகம் மனிதத்தையும் விலக்கி நிற்கிறது. பிரேம்-ரமேஷின் இந்தக் கட்டுரை ஒவ்வொரு ஆத்திகனையும் (நாத்திகனையும்) கூட தனது நம்பிக்கைகளைக் கேள்விகேட்கத் தூண்டும்.

ஆனால் இந்தக் கட்டுரை முழுவதும் விரவிக்கிடக்கும் கருதுகோள்களில் பல முரண்பாடுகள் இருக்கின்றன. பல அடிப்படை உண்மைகள் எழுதுகின்ற விஷயத்திற்குத் துணைபோகத் திரிக்கப்பட்டிருக்கின்றன அல்லது நீர்க்கப்பட்டிருக்கின்றன. இன்றைக்கும் தெளிவில்லாமல், இன்னும் சர்ச்சைகளுக்கு உட்படும் பல விஷயங்கள் தீர்ந்த முடிபுகளைப் போலத் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன. எல்லாவற்றையும்விட இந்தக் கட்டுரை அறிவியலைப் பற்றி மிகமிகத் தவறான புரிதலை முன்வைக்கிறது. இன்றைக்கு இறைநம்பிக்கை, சமயம், ஆத்திகமும் உள்ளுணர்வும் போன்ற விஷயங்களை எப்படிக் குழப்பியிருக்கிறார்கள் என்று எழுதுகிறேன். அடுத்ததாக, மிக முக்கியமாக அறிவியலைப் பற்றிய இவர்களது தவறான புரிதல் (அல்லது பொய்ப்பிரச்சாரத்தை)ப் பற்றி எழுதுகிறேன்.

முதலாவதாகக், கட்டுரையின் தொடக்கத்தில்

... இறைநம்பிக்கை என்று கூறப்படும் 'மன அமைப்பு' சமூக அளவில் இறைமறுப்புக்குச் சற்றே முன்னானது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். மொழி, சமூக விதிகள், பண்பாடு என்பவை 'மனிதரின் நிலை' என்பதற்கு அடிப்படையாக அமைவது போலவே இறை நம்பிக்கையும் ஒரு அடிப்படைக் கட்டமைப்பு... கடவுள் என்பது வேறொன்றுமில்லை, 'சமூகமே' என்று பழங்காலத்தே அறியப்பட்டுவிட்ட ஒன்றுதான்

இது இன்னும் தீராத விஷயம். இந்த இடத்தில் சமயத்தையும் இறையுணர்வையும் குழப்புகிறார்கள். கட்டமைக்கப்பட்ட சமயங்களுக்குச் சமூகத்தின் இருப்பு தேவை. ஆனால் இறைநம்பிக்கை வேறுவழிகளில் தோன்றுகிறது.

இறைநம்பிக்கை முறைகளைத் தொல் நாகரீகங்களிலிருந்து ஆராயும் அறிஞர்களுக்குச் சமூகத்தின் பங்கைக் குறித்துத் தெளிவு பிறக்கவில்லை. ஆராய்ந்து நிகழ்வுகளின், விளைவுகளின் காரணங்களை உணர்ந்தபிறகுதான் மனிதனுக்கு இயற்கையிலிருந்த பெரும்பயமும் மரியாதையும் நீங்கின. அந்த அறிவு கிடைப்பதற்கு முன் மனிதன் மழையைக் கண்டு பயந்தான், காற்றை அஞ்சினான், ஒளியைப் போற்றினான், நெருப்பைக் கண்டு வெருண்டான். இந்த பயம், மரியாதை, வெருட்சி எல்லாம் அவனறியாத இயக்கு சக்திகளைத் தொழ வைத்தன. இந்த அடிப்படையுணர்வைத் திரட்டி சமயம் என்ற கட்டமைப்பாக்குவதற்குத்தான் சமூகம் தேவைப்பட்டது. (பலரும் ஒரேமாதிரியான பயத்தையும், மரியாதையையும் பகிர்ந்துகொள்ளுதல்). கடவுளுக்கு வடிவம் தருவதற்கும் இறையுணர்வுக்கும் இருக்கும் வித்தியாசம் இங்கே நீர்த்துப் போயிருக்கிறது. பகுத்தறியும் முன்னர் அவனுக்கு எல்லாமே தன் சக்திக்கு அப்பாற்பட்டவைதான், இந்தச் சக்திக்கு அப்பாற்பட்டதே கடவுள் என்பது எல்லா ஆதிமதங்களுக்கும் அடிப்படையான கருதுகோள். எனவே ஆத்திகம் எப்படிப் பிறந்தது என்று தெளிவாகச் சொல்ல முடியாமல் இருக்கிறது. சொல்லப்போனால் ஆதிமனிதன் அறியொணார் (Agnost) அறியொணாமையிலிருந்து (அஞ்ஞானத்திலிருந்து) விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒரே நேரத்தில் கிளைத்தன. ஆத்திகம், நாத்திகம், தோற்றம், படிநிலைகள், இடையில் விஞ்ஞானம் என்று விரித்துக்கொண்டு போகும் பிரேம்-ரமேஷ் அறியொணாமையை முழுவதுமாகத் தவறவிட்டிருக்கிறார்.

இறையுணர்வு இறைமறுப்பிற்கு முன்னானது என்பதில் மறுகருத்துக்கு இடமில்லை. இல்லாத ஒன்றை எப்படி மறுக்கமுடியும்?

... உள்ளுணர்வு' என்ற வகையில் இறைநம்பிக்கைக்கு எந்த இடமும் இருப்பதில்லை. சமூக மனிதராதல், மொழியறிதல், மொழிக்குள் இடம்பெறுதல், அறிவு பெறுதல் என்ற செயல்பாட்டின் ஒரு கட்டத்தில்தான் இறைநம்பிக்கையும் இறையுணர்வும் வடிவம் பெறுகிறது

இந்த வாதத்திற்கும் எந்த அடிப்படையுமில்லை. இறையுணர்வை மொழியுணர்வுக்கு முந்தையதாகத்தான் பல மானுடத்தோற்றவியலார் கருதுகிறார்கள். சமூகங்கள் உருப்பெறுவதற்கு முன், திரட்சியடையாத மொழிகளில் மனிதன் ஊடாடிக்கொண்டிருந்த காலங்களில் அவனில் முன் சொன்ன பயம், மரியாதை, வெருட்சி ஆகியவையே மேலோங்கி இருந்தன. அது இறைநம்பிக்கை நிலை. புதிர்கள் ஒவ்வொன்றாக அவிழும்பொழுதுதான் நாத்திகம் உருப்பெருகிறது. புதிர்கள் அவிழ்வதற்குப் பட்டறிவு மாத்திரம் போதாது, கற்றலும் அவசியம். கற்றல் சமூகத்தில்தான் சாத்தியம். நாத்திகத்தின் தோற்றத்தில் அறிவியல் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆனால் அதே அறிவியல் மறுபுறத்தில் தொடர்ச்சியாகக் கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டிருக்க அறியாதவற்றைச் சிலர் பரம்பொருளின் கணக்கில் போட்டுவைக்கிறார்கள். இதுவே மாபெரும் விஞ்ஞானிகளில் சிலரைப் பழுத்த ஆன்மீகவாதிகளாக்குகிறது. மறுபுறத்தில் ஒரு நாளில் எல்லா புதிர்களும் அவிழ்ந்துவிடும் என்றெண்ணுபவர்கள் நாத்திகத்தைக் கைகொள்கிறார்கள். ஆனால் பலரின் சாய்வும் காலத்திற்கேற்ப மாறிக்கொண்டேயிருக்க அறிவொணாமையே சமநிலையாகிப்போகிறது.

பிரேம்-ரமேஷ் பல இடங்களில் தெளிவில்லாத சொற்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக,

எந்த ஒரு இறைநம்பிக்கையாளரும் மற்றொரு வகையில் இறைமறுப்பாளரே' என்பது வெளிப்படை" ... பிற தெய்வங்கள் என்ற வகையில் மறுப்பாளராக நாத்திகராகவே இருக்கிறார்.

இந்த இடத்தில் இறைநம்பிக்கை என்பது சமயநம்பிக்கை என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. முழுமையான இறைநம்பிக்கைக்கு மதங்கள் தேவையில்லை. பலர் தெய்வம் என்று எதைக் காட்டினாலும் தொழத்தயாராக இருப்பதைப் பார்க்கிறோம். இன்னும் சிலருக்குச் சமயங்களும் காலங்களுக்கேற்ப மாறிக்கொண்டே போகின்றன. வைதீக இந்துக்கள்கூட இடையிடையில் வேளாங்கன்னி போய்வருவதைப் பார்க்கலாம். நாத்திகம் என்பது இறைமறுப்பு. “பிற தெய்வங்களை மறுக்கும் நாத்திகர்கள்” என்று ஒரு பிரிவு கிடையாது.

இதே பத்தியில் “பிற தெய்வங்கள் அனைத்தும் கட்டுக்கதைகளாக, வெறும் புனைவுகளாக அவருக்கு இருக்கிறது. நாத்திகம் தொடங்கும் இடம் இதுதான்” என்று சொல்கிறார்கள். ஆத்திகத்தின் குழப்பமே நாத்திகத்தின் தோற்றம் என்பது சரியான வாதமாகாது. அறிவியலின் தெளிவும் நாத்திகத்தின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது. மதங்களின் மீது அவநம்பிக்கை கொண்டவர்களுக்குக் கூட நாத்திகத்தைத் தழுவ அறிவியலின் உதவி அவசியமாகிறது. ஏனென்றால் மதங்கள் அனைத்தும் வெருட்டும் புனைவுகளைக்கொண்டவை, வெருட்சி நீங்க (மதக்) குழப்பம் ஒருநாளும் உதவாது, தெளிவே அதன் மருந்து.


பிரேம்-ரமேஷின் இந்தக் கடவுளைக் கொல்பவர்கள் கட்டுரையில் அறிவியலைக் குறித்த தவறான புரிதல்கள் விரவிக்கிடக்கின்றன. இது பிரேம்-ரமேஷிற்கு மாத்திரமான தவறான புரிதல் (அல்லது பொய்ப்பிரச்சாரம்) என்று சொல்ல வரவில்லை. நம்மிடையே அறிவியலைக் குறித்த அக்கறை அவ்வளவுதான் இருக்கிறது.

"இன்றைய அறிவியல் கடவுள் மறுப்பில் தொடங்கியது. உலகின், பிரபஞ்சத்தின் உள்ளார்ந்த விதிகளைக் கண்டறிய தெய்வீக விளக்கங்கள் பயன்படாது என்று கண்டவர்கள் மேற்குலக அறிவியலின் தொடக்கத்தைச் செய்தார்கள். வேதங்களும் சமய நூல்களும் மறைத்தவற்றைத் தேடி இவர்கள் வேறு திசையில் நடந்தார்கள். அரிஸ்டாட்டில் தொடங்கி ஐன்ஸ்டைன் வரை மறைக்கப்பட்ட தெய்வீக சந்தேகங்களைப் பிளந்து பார்க்கத் தொடங்கியவர்களே"

கட்டுரையின் நோக்கத்திற்காகத் திரித்துச் சொல்லப்படும் இவற்றில் சற்றும் உண்மை கிடையாது. இதைப் படிப்பவர்களுக்கு அரிஸ்ட்டாட்டிலும் ஐன்ஸ்டைனும் தங்கள் ஆராய்ச்சியின் துவங்கங்களாக சமய நூல்களைக் கொண்டார்கள் என்ற மாயபிம்பம் உருவாகும். ஏதோ ஆராய்ச்சி செய்யும்பொழுது இவர்களது இடது கைகளில் பைபிள் இருந்ததாகத் தோற்றமளிக்கும் வகையில் சொல்லப்பட்டிருக்கிறது. ஐன்ஸ்டைன் பிளந்து பார்த்தது தெய்வீக சந்தேகங்களையல்ல, அது அன்றளவின்பாற்பட்ட அறிவியல் புரிதல்களையே. ஐன்ஸ்டைனின் குழப்பத்திற்குக் காரணம் பைபிள் இல்லை; அது நியூட்டனின் இயக்கியல் விதிச் சட்டகமே.

அறிவியலின் தொடக்கம் கடவுள் மறுப்பில் கிடையாது. அது கடவுளிலும் கிடையாது. அறிவியலின் ஒரே நோக்கம் மெய்காணல். இதற்கு ஆத்திகமும் நாத்திகமும் எந்த வகையிலும் துணைக்கு வராது. அறிவியலின் தொடக்கம் அறிவியல்தான். அவர்களை வழிநடத்துவது சந்தேகங்கள். சொல்லப்பட்ட எந்த ஒரு வாக்கியத்தையும் அவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கிறார்கள். மறுப்பு அவர்களின் பிறவிக்குணம். பூமி தட்டை என்று சொன்னால், முதலில் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். அது தட்டையாக இல்லாமலிருக்க என்னென்ன காரணங்கள் இருக்கலாம் என்று பட்டியலிடுகிறார்கள். தாங்கள் பட்டியலிடும் அதே காரணங்களை அவர்கள் மறுதலித்து, சோதித்துப் பின்னர் தெளிவு பெற்றே ஏற்றுக்கொள்கிறார்கள். தொடர்ச்சியான இந்த நிலையில் பூமியின் உண்மை வடிவம் வெளிப்படுகிறது. அதையும் பல்வேறு காரணிகளின் மூலம் உறுதிப்படுத்திக்கொண்டு திரமான கோட்பாட்டை முன்மொழிகிறார்கள். இதுதான் அறிவியல் வழி. இதில் கடவுள் மறுப்பு எங்கிருந்து வருகிறது?

அறிவியலில் பயன்படுத்தப்படும் ‘மறுப்பு’ (refuting) என்ற ஒற்றைச் சொல் நாத்திகர்களின் பிரச்சாரத்திற்குத் துணைப்போகிறது. “அவ்வளோ பெரிய சயின்டிஸ்ட் அவரே சாமி கும்புடுறார்” என்று ஆத்திகர்கள் பரப்புவது எவ்வளவு தவறோ அதே அளவுக்கு “அறிவியல் நாத்திகத்தை உறுதி செய்கிறது” என்பதும் நாத்திகர்களின் சுயநலப் பொய்ப்பிரச்சாரம். அறிவியல் அதன் வழியில் உண்மைகளைக் கண்டறிந்துகொண்டே போகிறது. ஆத்திகர்களும் நாத்திகர்களும் அறிவியலை வைத்துப் பிழைப்பு நடத்துகிறார்கள்.

தொடர்ந்து அதே பத்தியில் கலிலியோவின், டார்வினின் கண்டுபிடிப்புகள் வைதீக நம்பிக்கைகளைக் கேள்விக்குறியாக்கியதைக் கூறும் பிரேம்-ரமேஷ் அறிவியலுடன் மறுமலர்ச்சி சிந்தனையாளர்களையும் கலைஞர்களையும் சேர்ப்பது வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் எல்லோருமாக “..இறையிருப்பைக் கேள்விக்குள்ளாக்கியபடி மர்மங்களை உடைத்து வேறு மர்மங்களை உருவாக்கினார்கள்… கொல்லப்பட்ட, தண்டிக்கப்பட்ட தெய்வங்களை மீட்டு மீண்டும் தெய்வீகப் போர்க்களங்களைக் கட்டியெழுப்பினார்கள் இவர்கள்” என்று சொல்கிறார்கள் பிரேம்-ரமேஷ். இந்த இடத்தில் அறிவியலாளர்கள் ஏதோ மர்மங்களை உருவாக்குவதைப் போன்ற தவறான எண்ணம் விதைக்கப்படுகிறது. உண்மையில் அறிவியலாளர்கள் புனைகதையாளர்கள், ஓவியர்களைப்போலத் தங்களை இப்படியெல்லாம் பறைசாற்றிக் கொள்வதில்லை. அவர்களுக்கு மர்மம் எதுவும் கிடையாது சந்தேகங்கள்தான் இருக்கின்றன. அந்தச் சந்தேகங்களை அவர்கள் உருவாக்குவதில்லை; அவை அவர்களுக்குக் கிடைக்கும் விடைகளுடன் இலவச இணைப்புகளாக வருகின்றன.

உருவாக்குதல், அழித்தொழித்தல், மர்மங்கள் இவையெல்லாம் கலைஞனின் இறுமாந்த நிலையில் தோன்றும் அதீத உணர்வுகள். உண்மையான அறிவியலாளர்கள் இப்படியெல்லாம் ஒருபொழுதும் குன்றேறி நின்றுக் கூவுவதில்லை. உண்மையைக் கண்டறிந்துவிட்டதாகப், படைத்துவிட்டதாக அவர்கள் ஒருபோதும் மார்தட்டிக்கொள்வதில்லை. அவர்கள் உலகத்தில் ஒன்றுதான் நிரந்தரம் - அது சந்தேகம். அவ்வப்பொழுது வரும் தெளிவுகள் அவர்களின் நெடும்பயணத்தில் கிடைக்கும் சிறு நிழல்கள். அவர்கள் பயணம் தீராத நெடும்பயணம் என்ற தெளிவு அவர்களுக்கு எப்பொழுதும் உண்டு. ஒற்றை ஓவியத்தைத் தீற்றிவிட்டு, புனைவை எழுதிவிட்டு எய்தும் இறுமாப்பு அறிவியல் உலகிற்கு அந்நியமானது. புதுராகம் படைத்ததாலே நானும் இறைவனே - ரீதியான மார்தட்டல்களுக்கு அறிவியலில் இடமில்லை.

"சாத்தானின் பெருவலிமை வேர்களுக்குத் தேவைப்பட்டது. அதே சமயம் கடவுளும் சாத்தானும் தமது ரகசிய நிலவறையில் மது அருந்தியபடி சதுரங்கம் விளையாடிக் கொண்டிருப்பதை சாவித்துவாரத்தின் வழியே கண்டு மிரண்டுபோனார்கள். இவர்களின் அடுத்த முயற்சி புதிய தெய்வங்களை உருவாக்குவதில் முடிந்தது. 'இறைமறுப்பு' இவ்வகையாக காலனிய வரலாற்றைத் தொடங்கி வைத்ததுடன் புதிய வகை அழிவின் வலைப்பின்னலையும் உருவாக்கித் தந்தது. நவீன அறிவியலும், நவீன கொடுங்கோன்மையும் இவ்வாறாக இறைமறுப்பில் தொடங்கி மனித மறுப்பில் முடிந்தன"

இது அறிவியல் மீது சற்றும் உண்மையில்லாத குற்றச்சாட்டு. அறிவியலுக்கும் இறைமறுப்புக்கும் எள்ளளவும் தொடர்பில்லை என்பதை நான் முன் பத்திகளில் நிறுவியிருக்கிறேன். நவீன அறிவியலை நவீன கொடுங்கோன்மையுடன் சேர்த்துவைப்பது மாபெரும் ஜல்லியடி. அறிவியல் குறித்த குறைந்தபட்ச தெளிவுள்ளவர்கள் யாரும் இப்படி ஒட்டுமொத்தக் குற்றச்சாட்டுகளை வைக்கமாட்டார்கள். நவீன, தொல் அறிவியல் எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து ஒரே ஒரு இலக்குதான் உண்டு; அது மெய்காணல். உண்மையை அறியும் முயற்சி தவிர வேறெந்த விஷயங்களும் அறிவியலாகமாட்டா. அறிவியலின் முடிபுகள் காலம் காலமாக அரசியல் வன்முறைக்கும், பொருளாதாரச் சுரண்டல்களுக்கும் பயன்பட்டு வந்தாலும், அறிவியலின் நோக்கங்கள் மீது எந்தக் குற்றங்களையும் சுமத்த முடியாது. இந்த நூற்றாண்டின் மாபெரும் அவலங்களான ஹிரோஷிமா, நகசாகியைத்தான் எல்லோரும் முதலாகச் சுட்டுவார்கள். இது ஆதிக்கப் போராட்டத்திற்கு அறிவியலின் உண்மைகளைப் பயன்படுத்திக் கொண்ட அரசியல் அவலம். இவர்களது அற்புதத் திறன், குண்டை வெடித்துவிட்டு அதை நவீன அறிவியலின் தலையில் சுமத்தும் பொய்பிரச்சாரத்தையும் வெட்கமின்றி மேற்கொள்வது. “ஐன்ஸ்டைனே வருந்தினார்” போன்ற வாதங்கள் இங்கே எடுபடாது. தன்னுடைய கண்டுபிடிப்புகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு எந்த அறிவியலாளனுக்கும் வருத்தம் தோன்றுவது இயற்கையே. அவர்களுக்கே உண்மையில்லை என்று தெரிந்தாலும் “ஏதோ ஒருவகையில் நானும் காரணமாகிவிட்டேனே” என்று சகமனிதனின் துக்கத்திற்கு வருந்துவதை இவர்கள் திறமையாகத் தங்கள் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதைச் சொல்லும்பொழுது ஐன்ஸ்டைனுக்கே தெரியும்; தானில்லாவிட்டால் இன்னொரு விஞ்ஞானி இதைக் கண்டறிந்திருக்க முடியும்.

இந்த இடத்தில் அறிவியலுக்கு எதிராக அரசியலும் பிற விளம்பரத்துறைகளும் எப்படித் திறமையாகச் செயல்படுகின்றன என்று பார்க்கலாம். அரியலூர் விபத்திற்குத் தான் முழுக்காரணமில்லாவிட்டாலும் தன் பதவியைத் துறந்த லால்பஹதூர் சாஸ்திரியை உத்தமர் என்று போற்றுவார்கள் (மன்னிக்கவும் தற்கால அரசியலில் எனக்கு உதாரணங்கள் கிடைக்கவில்லை). இதை அரசியல் நேர்மை என்று பாராட்டுவார்கள். மறுபுறத்தில் அதேபோல் தான் காரணமில்லை என்று தெரிந்தும் ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் புலம்பினால் அதையே ஒப்புதல் வாக்குமூலமாக மாற்றி அறிவியலின் மீது கோடரியைப் பாய்ச்சுவார்கள். காலம் காலமாக அறிவியலுக்கு இழைக்கப்பட்டு வரும் கொடுமை இது. இதே போல இன்றைய சிக்கல்களான உலகளாவிய சூடேற்றம், மாசுப்படுத்தல், உயிர்ப்பன்முகக் குறைவு, நவீன நோய்கள், நவீன போர்நுட்பங்கள் இப்படி எல்லாவற்றுக்கும் பழியைத் திறமையாக அறிவியலின்மீது போட்டுவிட்டு, அரசியல்வாதிகளும் வர்த்தகர்களும் தாங்கள் செய்யும் ஏமாற்றல்களைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்கள். உலகைக் கட்டிக் காப்பதாகக் கூறும் கலைஞர்களோ புரிதல் சற்றுமின்றி அவர்களது வர்த்தகத்திற்கு இலவச விளம்பரங்களைச் செய்வதைத் தங்கள் பிறவிக்கடனாகக் கொண்டிருக்கிறார்கள்.


முதலில் பதிப்பிக்கப்படது: ஏப்ரில் 2005