விமர்சனங்கள்

விவேக் சுப்பிரமணியன்

(நீலி சஞ்சிகையில்) 01 பெருவரி 2026

வரலாறு என்பது பல நேரங்களில் சில ஆளுமைகளை மிகைப்படுத்துவதும், அவர்களுக்கு நிழலாக இருந்தவர்களை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்வதுமான ஒரு விசித்திரமான போக்கைக் கொண்டது. ஆனால் அப்படி அநீதி இழைக்கப்பட்டதாக சொல்லும் ஆளுமைகளில் உண்மையும் மிகைப்படுத்துதலும் உண்டு. இந்த வரலாற்றுப் பிழையைச் சுட்டிக்காட்டி, அறிவியலின் பிதாமகன் ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் புகழுக்கு பின்னால் மறைந்து கிடக்கும் ஆளுமையை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது “ஐன்ஸ்டைனின் மனைவி மிலேவா” என்ற கட்டுரை. இக்கட்டுரையின் அடிநாதமாக அமைவது 1905-ஆம் ஆண்டு ஐன்ஸ்டைன் நிகழ்த்திய அந்த அற்புத ஆண்டு (Annus Mirabilis) சாதனைகள் ஆகும். அந்த ஒரே ஆண்டில் அவர் வெளியிட்ட நான்கு ஆய்வுக் கட்டுரைகள் நவீன இயற்பியலின் போக்கையே மாற்றின. ஒளிமின் விளைவு மூலம் ஒளியை ஆற்றல் பொட்டலங்களாக அவர் விளக்கியது குவாண்டம் இயற்பியலுக்கு வித்திட்டது. எல்லாவற்றுக்கும் மேலாக, அவரது விசேடச் சார்நிலைக் கோட்பாடு காலம் மற்றும் வெளி குறித்த மனிதனின் புரிதலை தலைகீழாக மாற்றியது. இதிலிருந்து பிறந்த E=mc^2 என்ற சமன்பாடு அணுசக்தி யுகத்தின் திறவுகோலாக அமைந்தது.

கட்டுரை எழுப்பும் மிக முக்கியமான கேள்வி: இந்தச் சாதனைகளில் மிலேவா மாரிச்சின் பங்கு என்ன? ஜுரிச் பாலிடெக்னிக்கில் இயற்பியல் பயின்ற ஒரே பெண், கணிதத்தில் தேர்ச்சி பெற்றவர் என்ற மிலேவாவின் பின்னணி, இந்தச் சிக்கலான அறிவியல் சமன்பாடுகளின் பின்னால் அவரது உழைப்பு இருந்திருக்கக்கூடும் என்ற வாதத்தை ஆராயும் Narrative Justice போன்றது இக்கட்டுரை. குறிப்பாக, சார்பியல் கோட்பாட்டின் கணித நுணுக்கங்களில் மிலேவாவின் பங்களிப்பு இருந்ததா என்ற கேள்வி சுவாரசியமான ஒன்றாக இருக்கிறது. ஐன்ஸ்டைனுக்கும் மிலேவாவுக்கும் இடையிலான காதல் கடிதங்களில் தென்படும் “நம் ஆய்வுகள்” “நம் முடிவுகள்” என்ற குறிப்புகள், மிலேவா வெறும் இல்லத்தரசி அல்ல, அவர் ஐன்ஸ்டைனின் சமமான அறிவுத் துணை என்பதை வாசகர்களுக்கு முதலில் உணர்த்துகின்றன. ஒரு திறமையான பெண் தனது கனவுகளைக் குடும்பத்திற்காகவும், கணவனின் வளர்ச்சிக்காகவும் பலிகொடுக்கும்போது, அந்தப் பலியின் மீதுதான் ஒரு மேதையின் கோபுரம் கட்டப்படுகிறது என்று தோன்றுகிறது.

இருப்பினும், கட்டுரையின் பின்பகுதியை ஆழமாக வாசிக்கும்போது, உரிமைகளுக்கும் கடினமான வரலாற்றுச் சான்றுகளுக்கும் இடையிலான இடைவெளி புலப்படுகிறது. ஐன்ஸ்டைன் தனது நோபல் பரிசுத் தொகையை மிலேவாவிற்கு வழங்கியதை “மௌனத்திற்காக” பார்க்கத் தோன்றினாலும், வரலாற்று ரீதியாக அது விவாகரத்து ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகவும், குழந்தைகளின் வாழ்வாதார உறுதிமொழியாகவுமே அறியப்படுகிறது. மிலேவா ஒரு சிறந்த அறிவுஜீவி என்பதில் ஐயமில்லை, ஆனால் சார்பியல் கோட்பாட்டின் இறுதி வடிவத்திலோ அல்லது அதன் கணிதத் தீர்வுகளிலோ அவர் நேரடியாகப் பங்களித்தார் என்பதற்கான எழுத்துப்பூர்வமான ஆதாரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை. இறுதியில், இக்கட்டுரை மிலேவாவை ஒரு இணை கண்டுபிடிப்பாளர் என்று நிறுவுவதை விட, ஒரு மேதையின் உருவாக்கத்தில் பெரும் தியாகத்தைச் செய்த, ஆனால் உரிய வாய்ப்புகள் மறுக்கப்பட்ட ஒரு உன்னதமான அறிவுத் துணை என்றே நம்மை ஏற்கச் செய்கிறது.

எனது விருப்பமான நூல் வால்டர் ஐசக்சன் தனது ‘Einstein: His Life and Universe’ முன்வைக்கும் கருத்துக்கள் இந்த மதிப்பாய்விற்கு ஒரு சமநிலையை வழங்குகின்றன. ஐசக்சன், மிலேவாவை ஐன்ஸ்டைனின் வெறும் மனைவியாகவோ அல்லது ஒரு சராசரிப் பெண்ணாகவோ சித்தரிக்கவில்லை. மாறாக, ஐன்ஸ்டைனின் இளமைக் காலத்தில் அவரது சிந்தனைகளைச் செதுக்கிய Intellectual Sounding Board என்று தான் மிலேவாவை அவர் உயர்த்திப் பிடிக்கிறார். ஐசக்சன் ஒரு வரலாற்று ஆசிரியராக அவரின் புத்தகத்தில் சார்பியல் கோட்பாடு அல்லது ஒளிமின் விளைவு போன்ற நுணுக்கமான கணிதக் கட்டமைப்புகளில் மிலேவா நேரடியாகப் பங்களித்தார் என்பதற்கான தகவல்கள் எதுவும் இல்லை.

ஐன்ஸ்டைன் ஒரு தந்தையாகத் தன் கடமைகளைச் செவ்வனே ஆற்றினார் என்பதே எனது புரிதல். வால்டர் ஐசக்சனின் புத்தகத்தில் , அவரது மகன் ஹான்ஸ் ஆல்பர்ட் தன் தந்தையைப் பற்றி நினைவுகூரும்போது, ‘என் தந்தை தீக்குச்சிப் பெட்டிகளையும் நூல்களையும் கொண்டு எனக்காக விளையாட்டு ரயில்களைச் செய்து தருவார்’ என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டிருப்பார்.எனவே, செர்பிய வரலாற்றாசிரியர்கள் வாதிடுவது போல, மிலேவாவுடனான மணமுறிவை intellectual Theft என்று என்னால் நம்ப இயலவில்லை. ஐன்ஸ்டைன் ஒரு கண்ணியமான வாழ்வையே மேற்கொண்டார். ஹான்ஸ் ஆல்பர்ட் பிறந்த தருணத்தில், அவரது மாமனார் வழங்க முன்வந்த 10,000 பிராங்க் வரதட்சணையை அவர் மறுத்த செய்தியும் ஐசக்சனின் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களின் முதல் குழந்தையைப் பற்றிய தகவல்கள் காலவெளியில் மறைந்து போனது என்பது வரலாற்றின் ஈடு செய்ய முடியாத ஒரு சோகமே.

இதேபோல் (கட்டுரையில் அல்ல) அணுக்கரு பிளவு Nuclear Fission கண்டுபிடிப்பில் லிஸ் மெய்ட்னரின் பங்கு புறக்கணிக்கப்பட்டு, ஓட்டோ ஹானுக்கு மட்டும் நோபல் பரிசு வழங்கப்பட்ட வரலாற்று அநீதியும் இங்கே நினைவுகூரத்தக்கது.

ஶ்ரீதர் நாராயணன்

(ஃபேஸ்புக் தளம்), 8 ஃபெப்ருவரி 2026

“ஐன்ஸ்டீன் அவருடைய பள்ளி கூடைப்பந்து அணியில் தேர்வாகவில்லையாம். அதனால் ஏமாற்றமுற்று விளையாட்டை விட்டு இயற்பியலில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார்” இப்படி ஒரு துணுக்கு செய்தி உலா வருவதைப் படித்திருப்பீர்கள். பொதுவாக நிரூபணம் உள்ள விஷயங்களை விட, இது போன்ற வாய்வழி பொய்யான செய்திகளுக்கு ஆயுளும், வீச்சும் அதிகம். சார்பியல் கோட்பாடு போன்ற அறிவியல் பாடங்களின் மீது மலைப்பும், ஒவ்வாமையும் கொண்டிருப்பவர்களுக்கு, அதன் தொடர்பான இது போன்ற ஆதாரமற்ற ட்ரிவியாக்கள் இலகுவான பேசுபொருள்களாக அமைந்து விடுகின்றன. ஏதோ ஒரு கணத்தில் இந்த அற்ப சங்கதிகளின் பொய்மை அம்பலப்பட்டுப் போனாலும், அதை விடாப்பிடியாக கைப்பிடித்துக் கொண்டு உயிரூட்டி வைத்துக் கொண்டிருப்பார்கள்.

Urban Legends என்று சொல்லப்படும் கட்டுக் கதைகள், நாம் குழுவாகக் கூடி விவாதிக்கும் போது சரமாரியாக வந்து விழுந்தவண்ணம் இருக்கும். தற்போது இணைய சர்ச்சைகளும், குறிப்பாக வாட்சப் ஃபார்வேர்டுகளும் இந்த கதைகளின் சுவாரசியத்தில்தான் உயிர்த்திருக்கின்றன. அக்கதைகளின் அடித்தளத்தை கேள்விக்குட்படுத்தும் விளக்கங்களுக்கு அவ்வளவு சுவாரசிய பலன் இருப்பதில்லை.

பள்ளிக்கூட கூடைப்பந்து அணித் தேர்வை விட, ஐன்ஸ்டீனின் காதல் வாழ்க்கையையோ, அல்லது அவருடைய அறிவு நேர்மையையோ பற்றிய கட்டுக்கதைகள் கிடைத்தால் சுவாரசியம் கூடுதலாக அமையும்தானே. ஆனால் அறிவியலின் வழி, எதையும் தர்க்கபூர்வமாகவும், பாரபட்சமுமின்றியும் சிந்தித்து முன்னேறுவது.

நீலி மின்னிதழில், நண்பரும் அறிவியலாளருமான Venkat Venkataramanan அத்தகையை கட்டுக்கதைகளை கட்டாக குவித்து, மொத்தமாக கட்டுடைக்கும் ஆய்வுக் கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். ஐன்ஸ்டீன் தன்னுடைய இளவயதிலேயே, இயற்பியலில் அற்புத கண்டுபிடிப்புகளை வெளியிடத் தொடங்கிவிட்டார். தன் காதலிக்கு எழுதும் காதல் கடிதத்தில் கூட “சீக்கிரமே நாம் மணந்து கொள்வோம். அப்பொழுது தடைகள் ஏதுமின்றி, குறுக்கீடுகள் இல்லாமல் நாம் இயற்பியலில் மூழ்கிக் கிடக்கலாம்” என்றுதான் எழுதியிருக்கிறார்.

தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்புகளில் மிலோவா-வின் (ஐன்ஸ்டீனின் மனைவி) பெயர் இருட்டடிப்பு செய்த அறிவு நேர்மையற்றவர் ஐன்ஸ்டீன் என்று பல தரப்புகளில் இருந்து சொல்லப்படும் கதைகளை, மிகவும் பொறுப்புணர்ச்சியுடன் அணுகி, ஆய்ந்து எழுதப்பட்ட கட்டுரை.

நாஜிக்கள் தலையெடுக்கும் முன்பான ஜெர்மானிய அரசில் பிறந்த ஐன்ஸ்டீன், அறிவுத் தேடலுடன் ஸ்விட்சர்லாந்து படிக்கப் போனது போல, அக்காலத்தில் மேரி க்யூரியும் போலந்து நாட்டில், பெண்களுக்கு உயர்கல்வி மறுக்கப்பட்டதால், அறிவுத்தேடலுடன் பாரிஸுக்கு சென்றவர். இயற்பியல், வேதியியல் என்று இரண்டு துறைகளிலும் நோபல் பரிசு பெற்ற மேரி க்யூரியை ஃப்ரெஞ்சு ஊடகங்கள் படு மோசமாக விமர்சித்தது, அவர் வீட்டின் முன் திரளாக மக்கள் நின்று மிரட்டியது போன்ற தாக்குதல்கள் நிகழ்ந்திருக்கின்றன. அப்போது மேரி க்யூரிக்கு ஆதரவாக குரல் கொடுத்து ஆறுதலாக கடிதம் எழுதியது அதே இளவயது ஐன்ஸ்டீன்தான்.

ஐன்ஸ்டீன் மீதான அவதூறுகள் பற்றிய தெளிவான விளக்கங்களுடன் அறிவியலாளர் வெங்கட் அவர்கள் எழுதியக் இக்கட்டுரையுடன் ஐன்ஸ்டீனின் அக்கடிதத்தையும் இணைத்துப் படிக்க வேண்டியது அவசியம்.

o0O0o

“உயர்மதிப்பிற்குரிய திருமதி க்யூரி அவர்களுக்கு,

பொருட்படுத்தும்படி சொல்ல ஏதுமில்லாமல் உங்களுக்கு எழுதுகிறேன் என்று என்னைப் பார்த்து சிரிக்காதீர்கள்.

தற்பொழுது, பொதுமக்கள் எவ்வளவு கீழ்மையான முறையில், உங்கள் மீது அடாவடித்தனமாக நடந்து கொள்கிறார்கள் என்பதால் மிகவும் கோபமடைந்திருக்கிறேன். அதற்கு ஒரு வெளிப்பாடு கொடுக்காமல் இருக்க முடியவில்லை.

இருப்பினும், நீங்கள் இந்தக் குப்பை கும்பலை, அவர்கள் அடிபணிந்து அளவிற்கதிமான மரியாதையை பொழிந்த போதும், தங்களுடைய பரபரப்பு வேட்கையை தீர்த்துக் கொள்ள முயலும்போதும், தொடர்ந்து வெறுத்தே வந்திருக்கிறீர்கள் என உறுதியாக நம்புகின்றேன். உங்கள் அறிவுத்திறன், துடிப்பு, நேர்மை முதலியவற்றின் மீது எவ்வளவு மதிப்பு கொண்டிருக்கிறேன் என்பதை சொல்ல உந்தப்படுகிறேன். பிரஸ்ஸல்ஸில் உங்களுளுடன் தனிப்பட்ட அறிமுகம் அமைந்ததற்கு என்னை அதிர்ஷ்டசாலி என எண்ணுகிறேன்.

இந்த இழிபிறவிகளில் இல்லாத எவரும் தம்மிடையே உங்களையும் லான்ழவானையும் (Langevin) போன்ற ஆளுமைகள் இருப்பதை எண்ணி எப்போதும் போல மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். தொடர்பில் இருப்பதையே பெருமையாக உணரும் அசலான மனிதர்கள் நீங்கள். இந்த கும்பல் தொடர்ந்து உங்களைப் பற்றியே அலடட்டிக் கொண்டிருந்தால், அந்த பொருளற்ற குப்பைகளை வாசிக்காமல், எந்த இழிபிறவிகளுக்கென எழுதப்பட்டதோ அவர்களுக்கே விட்டுவிடுங்கள். உங்களுக்கும், லாங்ழவானுக்கும், பெர்ரினுக்கும் எனது உளமார்ந்த வாழ்த்துகளுடன்,

உங்கள் உண்மையான, ஐன்ஸ்டீன்

பின்குறிப்பு: “ப்ளாங்கின் (Plank) கதிர்வீச்சு புலத்தில் ஈரணு மூலக்கூற்றின் இயக்கத்திற்கான புள்ளியியல் விதியை, இயற்கை கட்டுப்பாட்டின்படி அந்தக் கட்டுமானத்தின் இயக்கம் நிலையான இயக்கவியல் விதிகளை பின்பற்றும் என்று வேடிக்கை நகைச்சுவை வழியாக நிர்ணயித்தேன். ஆனால், நடைமுறையில், இந்த விதி செல்லுபடியாகும் என்கிற நம்பிக்கை எனக்கு மிகக் குறைவுதான்” o0O0o

ஏதோ ஒரு காரணத்திற்காகவோ, அல்லது பிழையான புரிதலினாலோ ஒருவர் மீது தவறான அபிப்ராயத்தை சிலர் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த புரிதல் பிறருக்கு ஒரு சுவாரசிய வம்புப் பேச்சாகவும் அமையலாம். அதில் சில ஆதாயங்களும் அவர்கள் அடையலாம்.

ஆனால் பிழையான புரிதல்களை, அவதூறுகளை, எவ்வித கடப்பாடுமற்று மறுத்து குரல் எழுப்புவதற்கு மனிதர்களிடையே ஒரு சிலருக்குத்தான் அறவுணர்ச்சி வாய்க்கப் பெறுகிறது. அவர்களையே ‘கனவான்கள்’ என்று அழைக்கிறோம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீனை அழைப்பது போல.